பள்ளிக் கூடங்களும் குறிப்பாக வகுப்பறைகளும் புதிய சொற்களையும் புழக்கத்தில் உள்ள பழைய சொற்களையும் பட்டை தீட்டும் ஒரு பட்டறையாகவே இன்றளவும் வாழ்ந்து வருகின்றன . திருப்பதியில் இருந்து வந்து பள்ளியில் சேர்ந்து புதிதாக ஆறாம் வகுப்புக்குள் நுழைகிறாள் அந்த குள்ளமான பொம்மை போன்ற குழந்தை. வகுப்பறைக்குள் வகுப்பு ஆசிரியர் அந்த குழந்தையை பார்த்து பெயர் என்ன ? எந்த ஊர் ? என்று கேட்கத் தொடங்கிய உடனேயே சக மாணவிகள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினார்கள் . ஐயா , அவள் பெயர் திருப்பதி என்றாள் ஒரு மாணவி . இன்னொரு மாணவி லட்டு என்றாள் . இன்னொரு மாணவி வெங்கடாசலபதி என்றாள் . ஆசிரியருக்கு புரிந்து விட்டது; பல்வேறு பெயர்களால் சக மாணவிகள் இவளைக் கேலி செய்கிறார்கள் என்று புரிந்த உடன் வகுப்பை அமைதிப்படுத்திவிட்டு அவளை மட்டும் கவனமாக நோக்கி பெயரைக் கேட்டார் அவள் ஹேமா என்றாள் . ஆனால் வகுப்பறைக்குள் என்னவோ அவளுடைய பெயர் லட்டு ,திருப்பதி, வெங்கடாசலபதி என்றே புழங்கி வந்தது. ஆசிரியரும் விதிவிலக்கு இல்லை. அவரும் பல வேளைகளில் லட்டு ,திருப்பதி ,வெங்கடாசலபதி என்றே அழைத்து வந்தார் . குழந்தை மெல்ல மெல்ல தமிழில் பேசவும் கற்றுக் கொண்டாள் . சில நாட்கள் கடந்தன ஒரு நாள் வகுப்பறைக்குள் நிகழ்ந்த ஒரு உரையாடலின் போது ஹேமா சொன்னாள் ஐயா எங்கள் குடும்ப கடவுள் முருகன் ;திருத்தணி முருகன் என்று தெளிவாகச் சொன்னாள். முருகன் என்கிற பெயர்ச்சொல்லை கேட்ட உடனேயே ஆசிரியருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி . மொழி மாறி இருக்கிறது; மொழி பேசும் எல்லைகள் மாறி இருக்கின்றன ;ஆனால் , "முருகன்" என்கிற சொல் அப்படியே நிலைத்திருக்கிறது .தொடர்ச்சியாக மக்கள் சமூகம் ஒன்றை , ஒரு மரபை தங்களுக்குள் சுமந்து வருவதற்கு இது ஒரு மிக முக்கியமான எடுத்துக்காட்டு. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இந்த தமிழ்ச்சொல் தமிழ்ச்சமூகத்துக்குள் குறிப்பாக திராவிடச் சமூகத்துக்குள் புழங்கி வருகிறது என்பதற்கு இது ஒரு மிகமுக்கியமான எடுத்துக்காட்டு.
தேசிகனியம்

