புதன், 11 ஜனவரி, 2012

தமிழ்மண்




 நமது தமிழகத்தின் அடையாள மலர் எது ? , அடையாளப் பறவை எது ? , அடையாள விலங்கு எது ? , அடையாள மரம் எது ?அடையாள விளையாட்டு எது ? அடையாள நடனம் எது ? நமது தமிழக அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள கோவில் கோபுரம் எங்குள்ளது   ? போன்ற வினாக்களுக்கு நமது மாணவர்களிடம் சரியான விடை இல்லை . ஒரு மொழியைக் கற்கவேண்டி அம்மொழிக்கு அடிமையானது மட்டுமல்லாமல், நமது மதிப்புறு அடையாளங்களை மறந்ததன் விளைவு காரணமாகவே மேற்கண்ட வினாக்களுக்கு நமது மாணவர்களிடம் சரியான விடை  இல்லை . எட்டாம் வகுப்பு மாணவிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் தாயாகவும் அறிவியலாளருக்கு மனைவியாகவும் நல்ல பொருளாதார வளம்கொண்ட மெத்தப்படித்தக்    குடும்பத் தலைவி தமிழ் அடையாளத்தை வைத்துக் கொண்டு இருப்பதால் நமக்கு என்ன பயன் ? என்று என்னைக் கேட்டார்.அதற்கு நான் அவரிடம் பதில் ஏதும் கூறவில்லை . ஆனால்,
 அக்குழந்தைகளிடம் விரிவாகப் பேசினேன்.அக் குழந்தைகள் ஆர்வமுடன் நான் கூறுவதைக் கேட்டார்கள் . நான் கூறுவது பல்வேறு இடங்களில் அவர்களுக்கு வியப்பாகவும் இருந்தது.   நமது செல்வங்கள் குறித்து மாணவர்களுக்கு சொல்லித் தர  பள்ளிகளும் ஆசிரியர்களும் பெற்றோர் களும்  ஆயத்தமாக இல்லை. நமது தமிழ் உருவாக்கிய நிலம் குறித்த புரிதலும் அவர்களுக்கு இல்லை . எனவே மாணவர்களிடம் தமிழ் வறுமை இயல்பான ஒன்றுதான் .  
தமிழகத்தின் அடையாள மலர் காந்தள் , பறவை பச்சைப் புறா , விலங்கு வரையாடு , மரம் பனைமரம் , விளையாட்டு கபடி , நடனம் பரதம் , இலச்சினை திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம். மேற்கண்டதமிழக அடையாளமான  ஏழனையும் மிக விரிவாகப் பேசுகிறது இக் கட்டுரை .     

மரகதப்புறா Emerald Dove
மரகதப் புறா  வெப்ப மண்டலத் தெற்காசியாவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வரையிலும், கிழக்கே இந்தோனேசியா, வடக்கு, கிழக்கு ஆஸ்திரேலியா வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் புறாவாகும். இப்புறவு, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறாவாகும் .
இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன.
பறத்தல் பொதுவான புறவுகளை ஒத்த விதத்தில் வேகமாகவும் நேராகவும், முறையான இறக்கைத் துடிப்புகளுடன், அவ்வப்போது விரைந்த கூறிய துடிப்புகளுடன் காணப்படும். பொதுவாக இப்பறவை விரும்பிய காட்டுப்பகுதிகளுக்கிடையே, தாழ்வாகப் பறக்கிறது. எனினும், தொந்தரவு செய்யப்பட நேரங்களில், பறப்பதை விட நடப்பதையே விரும்புகிறது. பறக்கும்போது, அடிச்சிறகுகள் பழுப்பு மஞ்சள் நிறமாகவும், பறக்கும் இறக்கைகள் பழுப்புச் சிவப்பு நிறமாகவும் தெரிகிறது.மரகதப் புறா தடித்த உருவமுடைய, சராசரியாக 23 முதல் 28 செ.மீ. (10 - 11.2 இன்ச்) நீளமுள்ள, நடுத்தர அளவுள்ள புறாவாகும். பின்பக்கமும் இறக்கைகளும் பளிச்சென மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். பறக்கும் போது, இறகுகளும் வாலும் கருத்தும், பின்பகுதி கருப்பு வெள்ளைப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது.
ஆண் பறவையின் தோள்ப் பகுதியில் வெளிறிய புள்ளியும், தலை பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. இவை பெண் பறவைக்கு இருப்பதில்லை. பெண் பறவைகள் மரப் பழுப்பு நிறம் மிகுந்தும், தோள்களில் பழுப்புக் குறியுடனும் காணப்படுகின்றன.இளம் பறவைகள்
பெண் பறவைகளை ஒத்த தோற்றத்தில் காணப்படுகின்றன.

மரகதப் புறாக்கள் தனித்தோ, இரட்டையாகவோ, சிறு குழுக்களாகவோ காணப்படுகின்றன.இனச்சேர்க்கை தவிர மற்ற நேரங்களில் இவை பெரும்பாலும் நிலத்திலேயே காணப்படுகின்றன. நிலத்தில் இவை விழுந்த பழங்களைத் தேடி உண்ணுகின்றன. இவை விதைகள், பழங்கள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்களை உண்ணுகின்றன. இவை பொதுவாக அணுகக்கூடியவையாகும் பழக்கப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன.இவற்றின் கூப்பாடு மென்மையிலிருந்து வலுக்கும் ஆறு அல்லது ஏழு கூவல்கள் கொண்ட, மெதுவான முனகும் கூவலாகக் காணப்படுகின்றது. இவை மூக்கிலிருந்து கூ கூ கூ  என்றும் ஒசையிடுகின்றன.ஆண் பறவைகள் இனச்சேர்க்கையின் போது மெல்லஆட்டமிடுகின்ற     

வரையாடு Nilgiri Tahr
வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.
வரையாடு = வரை + ஆடு. வரை என்பது மலை, மலையுச்சி, குன்று, குவடு ஆகியப் பொருள்களை உணர்த்துகின்றன. ஆடு என்பது விலங்கினங்களில் ஒன்றான ஆட்டின் இனத்தைச் சார்ந்தது என்பதை உணர்த்துகிறது.
'ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்' என்று சீவகசிந்தாமணியில் வரும் அடி இதன் பெயர் முற்காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழங்கியதையும், இதன் மலைச்சிகர வாழ்க்கையையும் விளக்குகிறது மதுரைக் கண்டராதித்தனின் பாடலில் வரையாடு நெல்லிக்காய் உண்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
புரி மட மரையான் கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?
ஆண் மற்றும் பெண் வரையாடுகள்காட்டாடு இனத்திலேயே வரையாடு மிகவும் பெரிய உடலமைப்பை கொண்டது. இந்தியாவில் காணப்படும் மற்றொரு காட்டாடு இனமான "இமாலய காட்டாட்டை" விட சற்று பெரியது. ஆண் வரையாடு, பெண் வரையாட்டைக் காட்டிலும் உடல் எடையில் இரண்டு மடங்குடையது. வளர்ந்து பருவமடைந்த வரையாட்டில் பாலியல் ஈருவத்தோற்றம் உண்டு, அதாவது ஆண் மற்றும் பெண் வரையாட்டினிடையே உடலமைப்பில் வேறுபாடு உண்டு. பெண் மற்றும் பருவமடையாத ஆண் வரையாட்டின் உடலின் மேல் பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி மங்கலான நிறத்திலும் காணப்படும். ஆண் வரையாட்டின் வயது முதிர்ந்து வருகையில் அதன் உடல்மயிரும் கருப்பாகிக்கொண்டே இருக்கும். நன்கு வளர்ந்து பருவமடைந்த ஆண் வரையாட்டின் பிட்டத்திற்கும் முதுகிற்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படும் . இருபாலுக்கும் தாடி இல்லை. பெண் வரையாட்டிற்கு இரண்டு காம்புகள் உண்டு, அதுவே மற்ற காட்டாடு இனங்களுக்கு நான்கு காம்புகள் உண்டு. இருபாலுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. ஆண் வரையாட்டின் கொம்பு பெண் வரையாட்டின் கொம்பின் நீளத்தைவிட அதிகமாகும். உயர்ந்த அளவு                                                                                                                                                                                                                
ஆணின் முதுகிற்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளி நிறத்தில் காணப்படுதல் வரையாட்டின் இனப்பெருக்க காலம் சூன் முதல் ஆகசுட்டு வரையிலான தென்மேற்கு பருவமழை காலமாகும். இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 178 முதல் 190 நாட்களாகும். தாய் பேறுகாலத்திற்கு பிறகு ஒன்று அல்லது அரிதாகவே இரண்டு குட்டி ஈன்றெடுக்கும். பெரும்பாலும் குட்டிகள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பிறக்கும். இக்காலம் குளிர் காலமென்பதால் குட்டிகளை அதிக வெப்பத்தின் தாக்கமின்றியிருக்கும். தாய், தன் குட்டியை தன் அரவணைப்பில் வைத்து மிகவும் பாதுகாக்கும். குட்டி பிறந்த பிறகு தாய்ப்பாலை பெரிதும் நம்பியிருந்தாலும், 2 முதல் 4 வாரங்களில்  திட உணவுகளைத் தின்னத் துவங்கும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 9 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1,200 - 2,600மீ உயர்ந்த மலைமுகடுகளில் உள்ள புல்வெளிகள் வரையாடுகளின் வாழிடமாகும். இவை 6 முதல் 150 வரை உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழும். பெரும்பாலும் 11-71 உறுப்பினர்களை கொண்ட குழுக்களே அறியப்பட்டுள்ளன. பருவமடைந்த ஆண்கள் பெரும்பாலும் தனித்து வாழும் அல்லது சிறு ஆண் குழுக்களாக வாழும், இனப்பெருக்க காலத்தில் பெண் குழுக்களோடு சேரும். பெண் குழுக்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்து அதனுள் வாழும், ஆண்கள் பல பெண் குழுக்களோடு கலந்து வாழும். இவை ஒன்றுக்கொன்று தகவல் தொடர்புகளை பார்த்தல், கத்துதல், நுகர்தல் ஆகியவற்றின் மூலம் பரிமாறிக்கொள்கிறது.
இவை புல்வெளிகளில் காணப்படும் புற்களையே உணவாக உண்ணும் வரையாடுகள் கூட்டமாக விடியற்காலையிலோ அல்லது மாலை நேரங்களிலோ மேயும். அதிக வெப்பமான பகல் வேளைகளில் செங்குத்தாக இருக்கும் பாறை இடுக்குகளில் ஓய்வெடுக்கும். இத்தகைய இடங்கள் கொன்றுண்ணிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இவ்விடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. கூட்டமாக ஓய்வு எடுக்கும்பொழுது அக்குழுவின் ஒரு உறுப்பினர் (பெரும்பாலும் பெண்), உயர்ந்த இடத்திலிருந்து காவல் காக்கும். இவ்விலங்குகள் மிகவும் கூரிய பார்வையுடையவை மேலும் எதிரிகளை மிகவும் எட்டத்திலிருந்து (தொலைவிலிருந்து) கண்டுபிடிக்கக் கூடியவை. தீவாய்ப்பைக் (அபாயத்தைக்) குறிக்க சீ்ழ்க்கை ஒலி எழுப்பியோ அல்லது உரக்கக் கத்தியோ உணர்த்தும்.வரையாடுகள் சிறுத்தை, செந்நாய், புலி போன்ற விலங்குகளால் கொன்றுண்ணப்படுகின்றன.
வரையாட்டின் தற்பொழுது மொத்த உயிர்த்தொகை 2000 முதல் 2500 வரையில், மொத்தம் 17 இடங்களில் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்டக் உயிர்த்தொகைகளாக வாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது. இதன் மொத்த உயிர்த்தொகையில் சுமார் 1000 எண்ணிக்கையிலானவை கேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவிலும், சுமார் 300 எண்ணிக்கையிலானவை ஆனைமலைப் பகுதிகளிலும் மற்றும் ஏனையவை இன்னபிற இடங்களிலும் காணப்படுகிறது. இவ்விலங்கின் வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் சாகுபடி செய்யப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது. தவிர காடுகளில் கால்நடை மேய்த்தல், மின் உற்பத்திக்கென அணை கட்டுதல், காடுகளில் சாலைகள் அமைத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் வரையடுகளின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் வரையாடிகளின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தலாகும்.

o        இரவிக்குளம் தேசிய பூங்கா (கேரளா)
o        ஆனைமலை (தமிழ் நாடு
§     முக்கூர்த்தி மலைகள் (தமிழ் நாடு)
§     நீலகிரி மலைகள் (தமிழ் நாடு)
§     அகத்திய மலைகள் (கேரளா)
§     ஹை கில்ஸ், மூணார் (கேரளா)
§     வால்பாறை (தமிழ் நாடு)
§     ஆழியார் மலைகள் (தமிழ் நாடு)
§     சிறீவல்லிப்புத்துர் (தமிழ் நாடு)



பனைமரம்
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus)
என்னும்பேரினத்தில்அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல.என்பர் தாவரவியலாளர் .
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.​ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும் இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, விய
ட்நாம், சீனா போன்றநாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்கநாடுகளிலும் காணப்படுகின்றன.(காண்க: பனைமரம்  என்ற உணவு )  
செங்காந்தள்
செங்காந்தள் (Gloriosa, குளோரியோசா) என்பது ஒரு பேரினம். இது ஐந்து அல்லது ஆறு சிற்றினங்களை கொண்டுள்ளது. இது கோல்சிக்கியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்தது. இது வெப்ப மண்டல ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த விஷத் தன்மை உள்ளது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும்.இது கண்வலிக்கிழங்கு என்றும் செங்காந்தள் அல்லது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
  •  
இக்கிழங்கானது வடிகால் வசதியுடைய செம்மண், பொறை மண் போன்றவற்றில் வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருப்பது இக்கிழங்கிற்கு ஏற்றது. இக்கிழங்கு V வடிவில் காணப்படும். கிழங்கு ஆனது ஆடிப்பட்டத்தில் நடவு செய்யப்படுகிறது.
கிழங்கு ஆனது நடவு செய்த 180 நாட்களில் பலன் தரத் தொடங்குகிறது. கிழங்கின் வளர்ச்சியைக் களைகள் பாதிக்காதவாரு 30, 60, 90 ஆகிய நாட்களில் களை எடுக்கப்படுகிறது. நட்ட உடன் நீர்ப்பாய்ச்சப்பட்டு பின்னர் 20-25 நாட்கள் கழித்து நீர்ப்பாய்ச்சுதல் நல்ல வளர்ச்சியைத் தரும். கிழங்கு வளர சராசரி மழையளவு 70 செ.மீ. ஆக இருக்க வேண்டும். கிழங்கு ஒவ்வொன்றும் 100 கிராம் எடை வரை இருக்கும். கோடைக் காலத்தில் கிழங்குகள் ஓய்வடைகின்றன. இதனால் காந்தள் கொடியானது துளிர்ப்பதில்லை.
அயல்மகரந்தச் சேர்க்கை மூலம் கருவுற்ற பூக்கள் மூலம் உருவான காய்களிலிருந்து செடி ஒன்றிற்கு 100 கிராம் விதைகளும், ஒரு கிலோ கிராம் அளவிலான கிழங்கும் கிடைக்கும். ஓர் ஏக்கருக்குக் கிட்டத்தட்ட 500 கிலோ கிராம் அளவு கிழங்கு கிடைக்கும். விதைகள் Indian Rupee symbol.svg500 - Indian Rupee symbol.svg1000 வரை விற்பனையாகும்.
இது ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். காந்தளை விதைகள் மூலமும் கிழங்குகள் மூலமும் பயிர் செய்யலாம். எனினும் கிழங்குகள் மூலமே வணிக வழியில் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.
வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.
சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் 'கோல்சிசின்' மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான 'கோல்ச்சிகோஸைடு' கண்டு பிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன் படுத்தப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட் எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய படிகங்களாக யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்குவதால் இந்த மூட்டுவலி வருவதாகவும், இம்மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாகத் தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இக்கிழங்கால் பாம்பின் நஞ்சு, தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் .
செங்காந்தள்  அல்லது கார்திகைப்பூ ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழத்தின் மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.

சடுகுடு (கபடி)

தமிழர்களால் பல காலமாக, பரவலாக விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று கபடி. இப்   பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. இதுதமிழக அடையாள விளையாட்டாகும்.  தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.
ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு") என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.
தரமான கபடித் தளம்
நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா.....                 

ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்

சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டன. இதுவரை இந்தியாவே வெல்லப்படாத உலகக்கோப்பை வாகையாளராக இருந்து வருகிறது. இருமுறை இரண்டாவதாக வந்து அடுத்த மிகப்பெரும் வெற்றியை ஈரான் பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாக்கித்தான் இரண்டாவதாக வந்தது.

பரதநாட்டியம்

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும் வரலாற்று நோக்கில், பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.இந்த நாட்டியம் தமிழக அடையாள நடனமாகும் .
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா'  என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார். பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும்.
திருவில்லிபுத்தூர்
 திருவில்லிப்புத்தூர் தமிழ்நாடு அரசு சின்னத்தில் திருவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம் இடம் பெற்றுள்ளது.    தமிழ்நாட்டின்   அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூர் நெசவுத் தொழிலுக்கு புகழ் பெற்றது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புக்கும் புகழ் பெற்றது.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

நன்றி : தமிழ் விக்கிப்பீடியா

வியாழன், 29 டிசம்பர், 2011

தமிழ்நிலம் தந்த தமிழிசை

உலக இனங்களில் தமிழினம்  மட்டும்தான் தனக்குத்தானே தரம் தாழ்ந்ததொரு   தரத்தை வழங்கிக் கொள்ளும்  இனமாகும் . தமிழினம்  தன்னிடம் உள்ள கலைச்செல்வங்களை முழுமையாகப்  புரிந்துகொள்ளவும் இல்லை ; உலகிற்கு பரப்பவும் இல்லை . செம்மொழியான தமிழ்   கொண்டிருக்கும் அனைத்துக் கலைகளும் போற்றிப்  பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உலகிற்குப் பரப்பப்பட வேண்டியதும் ஆகும்
 செம்மொழியான தமிழ்   கொண்டிருக்கும் அனைத்துக் கலைகளும் போற்றிப்  பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உலகிற்குப் பரப்பப்பட வேண்டியதும் ஆகும் .


தமிழினம்  கொண்டிருக்கும் பல்வேறு கலைகளில் இசைக்கலை குறிப்பிடத் தகுந்தது ஆகும் . நமது மரபிசைக்கும் அம்மரபிசையை உருவாக்கிய நாட்டுப்புற இசைக்கும்  2500 – ஆண்டுகளுக்கும் அதிக வயது உண்டு . இந்திய இசையான இந்துஸ்தானிக்கும் தென்இந்திய இசையான கர்நாடக இசைக்கும் தாய் தமிழசையாகும் . ஆனால் உலக அரங்கில் இந்துஸ்தானியும் , கர்நாடக இசையும் பெற்றிருக்கும் வெகுசன அறிமுகத்தை தமிழிசை பெறவில்லை . காரணம், நாம் நமது மரபிசையை மறந்ததும் , முழுமையான தரம்தந்து பரப்பாததும் ஆகும் . நம்மிடம் வெகுசனமக்கள் ரசிக்கும் இசைக்கூறுகள் இல்லையா ? இசைக்கருவிகள் இல்லையா ? பாடல்கள் இல்லையா ? என்றால் அனைத்தும் உண்டு . ஆனால் , நாம் நமது இசைரசனையை திரைப்படப் பாடல்களாகச் சுருக்கிக் கொண்டோம் . திரைப்படத் துறைக்குள் பயணிக்கும் இசை அறிஞர்கள் திரைப்படம் தாண்டியதொரு   இசையைக் குறித்து சிந்திக்கவும் இல்லை, செயல்படவும் இல்லை. இதனால், உலகம் ஒரு பெரும் கலைவடிவை இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாமலே இயங்கி வருகிறது.  ஏன் தமிழனமே நமது இசை வடிவை முழுமையாக உணர்ந்து கொள்ள வில்லை . நமது இசையைப்  புரிந்து கொள்ள, உணர்ந்து உலகிற்குச் சொல்ல  ஒருசில இணைப்புகளை இங்கே தருகிறேன்.  இதன் தரத்தை மதிப்பிடுங்கள். நமது இசையும் இசைக் கருவிக்களும் தரமானது என்றால் உலகிற்குச் சொல்லுங்கள் .

செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழ்நாடு


தமிழ் நாளிதழ்  ஞாயிறன்று  வெளியிடும் வார இதழ் ஒன்றில் வாசகர் ஒருவர் “ ஆந்திரம் , கேரளம் என்று இல்லாமல் நமது மாநிலத்திற்கு மட்டும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே இது என்ன தனி நாடா ?” என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார் அதற்கு அவ்வார இதழில் முகத்தை பொம்மைபோல் வைத்துக் கொண்டு பதில் கூறிவரும் இதழாசிரியர் “இது திராவிட கழகத்தார் செய்த வேலை. அண்ணாத்துரை இவ்வாறு பெயர் சூட்டினார் என்பர். தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னர் இம்மாநிலம் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும் மதறாஸ் ராஜதானி என்று  இந்தியிலும் அழைக்கப்பட்டு வந்தது” . என்று, பொருந்தாத ஒரு பெயரை தமிழ் மண்ணுக்கு வைத்துவிட்டது போன்று   பதில் சொல்லியிருந்தார் அந்தத்  தமிழ்வளர்க்கும் இதழாளர் . இவருக்குத் தமிழ்நாடு என்ற சொல்லின் வரலாறு தெரியாது என்று நினைக்க வேண்டாம். தெரிந்தே தமிழ் அடையாளங்களை இளம் தலைமுறைகளிடமிருந்து அழிக்கும் முயற்சியிது .     
 தமிழ்நாடு என்ற இப்பெயர்ச்சொல் மிகநீண்ட வரலாறு கொண்டது .  தமிழ் நிலப்பரப்பில் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களாலும் புலவர்களாலும் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்ததொரு உயிரோட்டம் கொண்டதொருசொல், இச்சொல். .
                  “வடவேங்கடம் தென்குமரி
                  ஆஇடைத்
                 தமிழ் கூறும் நல் உலகத்து”
     தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ்கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பிய பாயிரச் செய்யுளில் பனம்பாரனார் குறிப்பிடுகின்றார் .
சங்ககாலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் சேரன் சேரநாட்டை ஆண்டான் , பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டான் , சோழன் சோழநாட்டை ஆண்டான் .அதன்பின்னர் பல்வேறு ஆட்சி மாற்றங்கள் இறுதியாக குடியாட்சி என்று தமிழகம் அரசியல் மாற்றங்களைப்  பெற்றுத் திகழ்கிறது. இப்பெரும் வரலாற்று மாற்றங்களுக்கு இடையே வரலாறாக அமைந்த சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள்தாம் தமிழ்மொழி வழங்கும் இப்பெருநிலப்பரப்பை முதல்முதலாக  ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுகிறார்.தமிழ்நிலம் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் காரணமாகவே இளங்கோவடிகள் தமிழ்நாடு என்று குறிப்பிடுகிறார் .
            “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
            இதுநீ கருதினை யாயின்” 
என்பது இளங்கோவின் தொடர் . மூவேந்தரைப் பற்றிக் கூறும்போது ‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்’ என்று கூறி மகிழ்கிறார் . மதுரையை , ‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’ என்று குறிப்பிடுகிறார் . சேரன்  செங்குட்டுவன் இமைய மலையில் தமிழரின் வீரச் சின்னத்தைப் பொறிக்க வேண்டும் என்று கூறும்போது
            “வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
            தென்தமிழ் நன்னாட்டுச் செழுவில் கயல்புலி
            மண்தலை ஏற்ற வரைக”
என்கிறார் . சிலப்பதிகாராம் பல்வேறு செய்திகளைப் பதிவு செய்துள்ளது எனினும் அவற்றுள் தலையாயது தமிழரின் ஒன்றுபட்ட தமிழ்நாடே .
      என்று  முளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’ என்று புகழ்ந்த  கம்பன்  , தென் தமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்’ என்று தமிழ் முனிவனின் இருப்பிடத்தைச் சுட்டுமிடத்து தென்தமிழ்நாட்டுப் பொதிகை மலைத் திருமுனிவன் என்று குறிப்பிடுகிறான் .11 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் இளம்பூரணர், செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்”. என்ற தொடரைப் பயன் படுத்துகிறார் . இளம்பூரணரது வரிகள் தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ் நாடு என்று வழங்கியமை வெளிப்படை .            
     பாரதியாரோ தன் கவிதைமூச்சு முழுதும் தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பைத்  தமிழ்நாடு என்று புகழ்கிறான்.                             
          செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
          தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
          -------------------------------------------------------------------------------
       வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
       வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
       காதல் புரியும் அரம்பையர் போலிளங்
       கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு   
என்று செந்தமிழ் நாடு என்ற கவிதையில் தமிழ்நாட்டைப் புகழ்ந்து பாடுகிறான்                      
             வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
               வாழிய வாழிய வே !
               வானமளந்த தனைத்தும் அளந்திடும்
               வண்மொழி வாழிய வே!
               ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
               இசைகொண்டு வாழிய வே!
               எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
               என்றென்றும் வாழிய வே!
               சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
              துலங்குக வையகமே !
              தொல்லை வினைதரு தொல்லை யகன்று
              சுடர்க தமிழ்நாடே!           
             --------------------------------------------------------------------------------
என்ற  தமிழ்மொழி வாழ்த்து கவிதையிலும் பாரதி தமிழ்மொழி வழங்கும் நிலப்பரப்பை தமிழ்நாடு என்று புகழ்கிறான் .
தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என்று பெயரிட்டுப்  புகழ்ந்து பாடிய இளங்கோவும் கம்பனும் பாரதியும் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்களா என்பதை மேற்கண்ட  இதழாளர் தெளிவு படுத்த வேண்டும் .                                                    
இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபோது தமிழ்மொழி மட்டும் பேசும் சென்னை மாநிலம் உருவானது. இக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக்கப் படவேண்டும் என்றும் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின . குறிப்பாக சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1953 ஆம் ஆண்டு திச 20 ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சிமொழி மாநாட்டை சென்னையில் நடத்தியது . தொடர்ந்து இவ்வமைப்பின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் ஆட்சிமொழி மாநாடு நடத்தப்பட்டது . 1954 ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில் சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் , இம் மாநிலத்தில் தமிழே ஆட்சிமொழியாக வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறான பல்வேறு இயக்கங்கள் இதே கோரிக்கைக்காக போராடின .இதனால் தமிழக சட்டமன்றத்தில் 27 – 12 – 1956 அன்று தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப் பட்டது இச்சட்டம் நிறைவேற்றப் பட்டபோது தி.மு.க வோ தி.க வோ  சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்க வில்லை; நல்லவேளை இது திராவிடக் கழகத்தாரின் வேலை இல்லை.  
தமிழ் அங்கீகாரதிற்கான தொடர் போராட்டம் தொடர் தியாகம் 1967 தேர்தலில் வெளிபட்டது திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது 1967 ஏப்ரல் 14 அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான   தமிழ்நாடு கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்றது .தமிழ்நாடு என்றச் சொல் மிக நீண்ட வரலாற்றின் விளைவு ;பெரும் தியாகதின் பயன் , எனவே மேற்கண்ட இதழாசிரியர் தனது கருத்தை மாற்றிக் கொள்வாராக .