ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

மகுடாட்டம் அல்லது கணியாட்டம்



கணியான்  ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற பழங்குடி சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலையாகும் . “மகுடம்” என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை “மகுடாட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை பல  நூற்றாண்டுகளுக்குக்கு முற்பட்ட ஆதிக்கலை என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி கன்னியாக்குமரி  தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடைவிழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.
கணியான் கூத்தில் இசை மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை முக்கியமான இசைக்கருவிகளாகும். “மகுடம்” டேப் அல்லது தப்பட்டை என்னும் வாத்தியத்தை ஒத்ததாகும். வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுகிறது இந்த இசைக்கருவி. உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவர். மிகுந்த ஓசையைத் தர உச்சம். இளகிய ஓசையைத் தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைக்கப்படும். முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். அண்ணாவி (ஆசிரியர்) பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப் பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வரும். மரபிசை , கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும், கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற இராகங்களும் இடம் பெறும். இந்த இசைக்கருவிகளை அடிக்கடி நெருப்பில் வாட்டி உரமேற்ற வேண்டும்.
கணியான் கூத்தின் போது சிறு தெய்வக்கதையே பாடி ஆடப்படுகிறது. சுடலை மாடனுக்கும் கணியானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. கணியான் கூத்து நடக்கும் கோயிலின் தெய்வம் பற்றிய கதையை முதலில் பாடிப் பின் மக்கள் விரும்பும் கதையைப் பாடும் வழக்கம் உள்ளது. நீலி அம்மன் கதை, சுடலைமாடன் கதை, பன்றி மாடன் கதை, வண்ணாரமாடன் கதை, கருப்பசாமி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் கதை, சந்தன மாரி கதை, முத்துப்பட்டன் கதை போன்றன குறிப்பிடத்தக்க கதைகளாகும். இது தவிர ராமாயணம், மகாபாரதக் கதைகளை வாய்மொழி வழக்கில் பாடியும் ஆடுவதுண்டு.

சிறுதெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் பேயாட்டம்’, ‘அம்மன் கூத்துபோன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம்.

இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் சாமியாடிகணியானைக் கூப்பிடுகிறார். வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் சாமியாடிஎன்று குறிப்பிடுவார்கள். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும். இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும் சாமியாடி தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை
கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப் பாடும் ஆசிரியர் அண்ணாவிஎனப்படுவார். இவரே குழுவுக்குத் தலைவராகவும் இருப்பார். ஒரு துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம் இசைப்போர் இருவர் என அமைவர். மகுடம் இசைப்பவர்களில் ஒருவர் அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர அம்மன் ஆட்டம் ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர், திரளை போடுபவர் என துணையாட்டக்குழுக்களும் உண்டு. இது தேவைக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு வேறுபடும். கணியான் கூத்து நடைபெறும் போது முதன்மைக் கலைஞர் மேடையின் நடுவில் நிற்பார். இவர் திறம்பட்ட கலைஞராக விளங்குவார். இவரை மையப்படுத்தியே கணியான் கூத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதுண்டு. கூத்தின் போது ஆசிரியர் மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பி்ல் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொண்டு தோற்றமளிப்பார்கள். அண்ணாவிமுதலில்பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர்களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படும். பாடல்களை அண்ணாவி விளக்கும் போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் பெண் வேடதாரிகள் ஆடுவது இல்லை. அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடதுபுறத்தில் ஒருவருமாக நின்று இவர்கள் தங்களது கால் சலங்கைகள் ஒலிக்குமாறு தரையில் கால்களைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக, பெண் வேடதாரிகளின் நடனத்தில் பாத வேலைப்பாடு அதிகம் காணப்படுகிறது. வேகமான பாத அசைவுகளில் தேர்ந்து விளங்குகிற கலைஞர்களாக இவர்கள் இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும், கதையினைக் கூறும்போதும் மகுடக்காரர்கள் இசைத்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டார் கலைகளுக்கே உரிய மண்ணின் பாவனைகள், நகைச்சுவை, பாலியல் குறியீடுகள் அனைத்துமே இக்கலையில் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.
“மகுடம்” என்ற சொல்லுக்குப்  பொருள் தேடிப் பார்த்த போது “கிரீடம்” அல்லது “முடி” என்றே அகராதிகள் பொருள் சொல்கின்றன . மகுடம் என்ற இசைக் கருவி பற்றி அகராதிகளில் பொருள் இல்லை ; பெரும்பகுதி தமிழ்மக்களுக்கும் மகுடம் என்ற இசைக்கருவி பற்றி தெரியாது . கணியான் கூத்தில் பக்கவாத்தியக் கருவியான  இந்த மகுடம் ஒரு நாட்டுப்புற இசைக் கருவியாக மட்டுமே இக்கலையைத்  தெரிந்த ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர் .இதையும் தாண்டிய ஒரு அடையாளம் மகுடம் என்ற இசைக்கருவிக்கு இல்லை . ஆனால் , இந்த மகுடம் ஒரு செவ்வியல்கூறு நிறைந்த இசைக் கருவியாகும் . இது கடத்துக்கு இணையான , மிருதங்கதுக்கு இணையான, தபுலாவுக்கு இணையான, தவிலுக்கு இணையான ஒரு இசைக் கருவியாகும் . இன்னபிற தோலிசைக் கருவிகளில் வாசிக்கப்படும் அனைத்துப் பாடங்களையும்  இந்த இசைக்கருவியில் வாசிக்க முடியும் .வாசித்து வருகின்றனர் . மகுடக் கலைஞர்கள் தேர்ந்த இசைக் கலைஞர்கள்தான் . இவர்கள் தங்களது குருவான அண்ணாவியிடம்  இசை கற்கின்றனர் . பரம்பரை பரம்பரையாக இக் கலையை நிகழ்த்தியும் வருகிறார்கள் .
மகுடம், கணியான் கூத்துக்கு மட்டுமல்ல மரபிசைப் பாடல்களுக்கும் பக்க வாத்தியமாக வாசிக்க முடியும். ஆனால், இக் கலைஞர்களுக்கு எந்தஒரு பாடகரும் வாய்ப்பு வழங்கவில்லை .இது நம் தமிழ் மண்ணுக்கே உரிய அவலங்களில் ஓன்று . நாம் நமது மரபுகளுக்கு எப்போதுமே தரம் தாழ்ந்த தரம் தருவதே இதற்குக் காரணமாகும். இக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததும் ஒரு காரணமாகும் . நாம் சாதியை என்று விட்டொழிக்கப்போகிறோம் ?   நாம் மக்களை மக்களாக என்று மதிக்கப் போகிறோம் ?
நல்வாய்ப்பாக இக் கலையை சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பார்த்த இசை ஆய்வாளர்,நாட்டியக் கலைஞர்  செல்வி . அகிலா இவ்விசைக் கருவியின் இசைச் செறிவினை உணர்ந்து,இவர்கள் செறிந்து வாழும் திருவைகுண்டம் சென்று இக் கலைஞர்களைச்  சந்தித்ததோடு , இக் கலையை நிகழ்த்தும் களத்திற்குச் சென்று ஆராய்ந்து மகுடத்தின் இசை நுணுக்கத்தை உணர்ந்து கொண்டார் . எனவே   மரபிசைக்குப்  பக்கவாத்தியக் கருவியாக மகுடதைப் பயன்படுத்தியும்  வருகிறார் . இக் கலைஞர்களை உலக மக்களுக்கு அறிமுகம் செய்து ,இக்கலைக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி, இதர இசைக் கலைஞர்களைப் போலவே இக் கலைஞர்களை வாழ வைப்பதே இவரது நோக்கமாகும் ; நாமும் மகுடத்தைப் பரப்புவோம். புகைப்படங்கள் : செல்வி .அகிலா அவர்கள் மகுடக் கலைஞர் களோடு நிகழ்த்திய இசைநிகழ்வின்போது எடுக்கப்பட்டது                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக