ஞாயிறு, 13 மே, 2012

"மகுடம்" இசையுடன் அகிலா!


கண்களை மூடிக் கொண்டு அந்த இசைக் கச்சேரியைக் கேட்டால், ஏதோ ஒரு பெரிய இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. கண்கள் திறந்தால் மேடையில் ஓர் இளம் பெண், உடன் இருபுறமும் இரு இளைஞர்கள். அவர்கள் கையில் சாதாரண வட்ட இசைக் கருவி, அவ்வளவே.
தவில், பம்பை, பறை, உடுக்கு, தபேலா, மிருதங்கம் என அத்தனைத் தோல் இசைக் கருவிகளின் ஒலியையும் கொண்டு வந்துவிடுகிறார்கள். எப்படி இது சாத்தியம்?
அந்த இசைக் கருவிக்கு "மகுடம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். பறையைப் போன்று காட்சிதரும் இது வேறொன்றும் இல்லை, தவிலில் இரு புறமும் இருக்கும் "உச்ச'த்தையும், "மந்த'த்தையும் கழற்றி எடுத்து தனியே வைத்து, கைகளால் பலவகைக் கருவிகளின் ஒலிகளை உண்டாக்குகிறார்கள் கலைஞர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ், சக்தி கணேஷ் இளைஞர்கள்தான் அந்த இருவரும். ஏறத்தாழ இவர்களின் தெருவே கணியன்கூத்துக்குப் பெயர்போன தெருவாகும்.
23 வயதே நிரம்பிய சங்கர் கணேஷ் எட்டாம் வகுப்பும் 25 வயதான சக்தி கணேஷ், பி.காமும் படித்திருக்கின்றனர். தங்களின் இசை குரு ராமமூர்த்தியின் மூலம் இந்தத் தொழிலை சுத்தமாகக் கற்றிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் இவர்கள் இருவரும். கடந்த ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இவர்களின் இசையைக் கேட்ட அகிலா, இதையே பக்க வாத்தியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரை தமிழ்நாட்டில் விழுப்புரம், உடுமலைப்பேட்டை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும்தான் இவர்கள் சேர்ந்து கச்சேரி நடத்தியிருக்கிறார்கள். இசை அளிப்பவர்களைப் போலவே இந்தக் குழுவின் ஒரே பாடகி, அமைப்பாளரான அகிலாவும் வித்தியாசமாவர்.
நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் பெண் பாடகர்கள் இப்போது அதிகரித்து வரும் நிலையில், நாட்டுப்புறப் பாடல்களுடன் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும், ஏன் இன்னும் ஒரு படி தாண்டி, இன்குலாப், தணிகைச்செல்வன் ஆகியோரின் பாடல்களையும் அற்புதமான சாரீரத்தில் வழங்குகிறார் அகிலா.
சமூகப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தும் இவர்களின் பாடல்களுக்கு முற்றிலும் வித்தியாசமான இசையுடன், இடையிடையே இசை மாற்றத்துடன் அரங்கம் அதிரும் இசைக்கச்சேரி களைகட்டுகிறது.
அவருடன் பேசியதிலிருந்து...
"சிதம்பரத்தைச் சேர்ந்த பெற்றோர் பழனி- ஜோதிமணி, வணிகக் குடும்பம். சிறுவயதிலிருந்தே இசை மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சென்னையில் இசையில் எம்ஏ, ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) ஆகியவற்றை முடித்தேன். பல்வேறு குழுக்களில் பாடகராக, நடனக் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன்.
கணியன்கூத்துக் கலைஞர்களைப் பார்த்த பிறகு, அவர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா? என்று அங்கு சென்று பார்த்துப் பேசினேன். இதுவரை மூன்று நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். தனிக் குழுவாக அமைக்க முடியுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. இயல்பாக அது அமைய வேண்டும் என விரும்புகிறேன்''
 நன்றி : தினமணிக் கதிர் 13-05-2012

கர்நாடக இசை என்பதே தமிழிசைதான்



கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் இசை ஆசிரியையிடம் இசை மூவர் யார் ? என்று ஒரு கேள்வியைக் கேட்டேன் . உடனடியாக அவர் தியாகையர் , சியாமசாஸ்திரிகள் , முத்துசாமி தீட்சிதர் என்று பதில் கூறினார் . அடுத்ததாக தமிழிசை மூவர் யார் ? என்று கேட்டேன் கொஞ்சம் சிந்தித்தார் ; என்னைப் பார்த்து சிரித்தார் ;தெரியல அப்பிடி மூணுபேர் இருக்காங்களா? என்று என்னைக் கேட்டார். தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளியில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சார்ந்த இசை ஆசிரியருக்கே தமிழிசை மூவரைத் தெரியவில்லை என்றால் தமிழிசையின் நிலை என்ன ? சாதாரணத் தமிழ் மக்களைப்பற்றி கூறத் தேவையில்லை . மாணவர்கள் நிலை என்ன ? இவரிடம் இசையைக் கற்கும் மாணவர்கள் தாம் வாழும் நிலத்தின் , தமது தாய்மொழியின்  இசை குறித்து தற்குறிகளாக மாறிவிட மாட்டார்களா ? இவ் ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் கர்நாடக இசை மட்டுமே. இவ் கர்நாடக இசையும் ஏதோ வடமொழி அறிஞர்கள் கண்டறிந்து உருவாக்கியது என்பதுதான் இவரது புரிதல் .

தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறந்துவிட்டால் அடிமை மோகம் உருவாகிவிடும் . தனக்கு என்று எதுவும் கிடையாது என்று நினைப்பவன் அவன். இதனால் தமிழனை கிட்டத்தட்ட பலநூறு ஆண்டுகள் வேற்று மொழி அரசுகள் அடிமையாக்கி  ஆண்டன . கர்நாடக அரசர்கள் , தெலுங்கு அரசர்கள் , மராத்திய அரசர்கள் , இசுலாமிய அரசர்கள் , ஆங்கில அரசு , பிரெஞ்சு அரசு என்று தொடர்ந்து பல நூறு ஆண்டுகள் தமிழன் அடிமை வாழ்வு வாழ்ந்து விட்டான் . இந்தியக் குடியாட்சி உருவான பின்பு தமிழன் திரைப்படத்திற்கு அடிமையானான் திரைப்படக் கதாநாயகன் இவனுக்குப் பெரும் தலைவனாகத் தெரிந்தான் ஆட்சியை அவனிடம் தந்தான் இதன் விளைவு தமிழக  ஊடகங்கள் ,வீடு ,பள்ளிக்கூடம் ,கோவில் ,கலந்துரையாடல்கள் என அனைத்து நிலைகளிலும் தமிழைத் தவிர மற்ற எல்லா மொழிகளும் வாழ்கின்றன . அவனது தத்துவம் களவாடப்பட்டது குறித்து எதுவும் தெரியாது . நமது ,மொழி ,பண்பாடு ,கலை ,மரபுகள் அனைத்தும் ஒடுக்கப் பட்டது குறித்து எதுவும் தெரியாது . இந்நிலையில் தமிழன் வளர்த்த தமிழிசை களவாடப் பட்டது குறித்தும்  அவனுக்கு எதுவும் தெரியாது .

ஓர் இனத்தை வெற்றிகொள்ள நினைக்கும் எதிரிகள் முதலில் மொழியையும் மரபான அடையாளங்களையும் அதன் இலக்கியங்களையும் அழிக்கும் செயலில் ஈடுபடுவர் . யாழ்ப்பாணம் நூலகம் கொளுத்தப்பட்டது இந்தவகையைச் சாரும் . தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சியின் போது தமிழோடு வடமொழி பெருமளவில் கலக்கப் பட்டது ; மணிப்பிரவாள நடை உருவானது . கல்வெட்டுகள் மணிப்பிறவாள நடையில் எழுதப்பட்டது. நம் தமிழிசையின் வழிவந்த இசைக் கலைச்சொற்கள் புறந்தள்ளப்பட்டு வடமொழிச் சொற்கள் புகுத்தப்பட்டது . ஒரு கலைத்துறை நிலைத்து வளம்பெற கலைச் சொற்கள் அடிப்படையானவை . நம் தமிழிசை மரபில் இந்த அடிப்படை நொறுக்கப்பட்டன. . இரண்டாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் தமிழிசையின் ஏழு சுரங்களும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற கலைச்சொற்களால் சுட்டப்பட்டிருக்கிறது . ஆனால் பிற்காலத்தில் இவை ஷாட்சம், ரிசபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்று வடமொழியாக்கப்பட்டது . பண்ணப்படும் இசை வடிவத்திற்குப் “பண்” என்று நம் முன்னோர் பெயரிட்டு அழைத்தனர் பிற்காலத்தில் இச்சொல் புறம்தள்ளப்பட்டு ராகம் என்ற வடசொல் புகுத்தப்பட்டது மேலும் இயக்கம், மண்டிலம் போன்ற சொற்கள் இருக்க ஸ்தாயி  என்ற வடசொல் புகுத்தப்பட்டது சுரங்கள் ஒலிப்பில் உயர்ந்து செல்வது ஏறி வருவது ஏறுநிரல் குறைந்து வருவது இறங்கி வருவது இறங்கு நிரல் இன்று இவை ஆரோகணம், அவரோகணம் என்ற வடசொல்லால் குறிக்கப்படுகிறது. . தமிழன் கண்ட பண்கள் கூட வடமொழியானது .செம்பாலை அரிகாம்போதி யானது. படுமலைப் பாலை நட பைரவி யானது. கோடிப் பாலை கரகரப் பிரிய ஆனது. விளரிப்பாலை அனுமத் தோடி யானது. இவையெல்லாம் போகட்டும்,

நமது இசையை தமிழிசை , இசை , இன்னிசை என்று நமது நூல்கள் குறிப்பிடுகின்றன ஆனால் சங்கீதம் என்ற வடசொல் புகுத்தப்பட்டது .நம் இசை அரங்குகளுக்கு இன்னிசை அரங்கு என்ற சொல் இருக்க அதனை சங்கீத கச்சேரி ஆக்கிவிட்டார்கள் இன்று தமிழக அரசு இசைக் கல்லூரி களிலும்கூட வடசொற்களே கோலோச்சுகிறது . இது தமிழின் தமிழினத்தின் வீழ்ச்சியாகும் . இவ் வீழ்ச்சியில் இருந்து விடுபட தமிழகப் பள்ளி மற்றும்  கல்லூரிகளில் இசை வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். இவ் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் தமிழிசை அறிஞர்களைக் கொண்டு உருவாக்கப் படவேண்டும்; நமது மரபான தமிழிசை பரப்பப்பட வேண்டும்
நன்றி : ப .சோழ நாடன் , நா . மம்மது